Monday 15 May 2017

எந்தக் கேள்வி கேட்டாலும்.......!!

இந்த ஆண்டு ஜனவரி 31 ம் திகதி அன்று என் ஃபேஸ்புக்கில் ( ஃபேஸ்புக்கை முகநூல் என்று எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ) எழுதிய பதிவை இங்கே மீள வெளியிடுகிறேன்.

'எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லியே தீருவது' என்கிற தீர்க்கமான முடிவோடு, பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான நேர்முகத் தேர்வுக்கு கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் ( 12 ம் திகதி )  போயிருந்தேன்.


'பிரான்சின் முக்கிய மூன்று கொள்கைகள் எவை? பரிஸ் மேயர் யார்? ஈபிள் கோபுரம் எப்போது கட்டப்பட்டது? ஐந்தாவது குடியரசின் ஜனாதிபதிகள் சிலரின் பெயர்கள்? என்று கேள்விகளை அடுக்கினார் அந்த 75 வயது மதிக்கத்தக்க பிரெஞ்சு அதிகாரி.

பிரான்சின் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் Jean Jacque Bourdin போல தோற்றமளித்தார் அவர்.

கேட்ட மறுநொடியே கேள்விகளுக்கான பதில்களை வழங்கிவிட்டேன்.

'ஜூலை 14 இல் என்ன நடந்தது?' என்று அடுத்த கேள்விக்குத் தாவினார்.

'Bastille சிறை உடைப்பில் இருந்து, 16 ம் லூயி மன்னனை இன்றைய கொன்கோர்ட் பார்க்கில் வைத்து தலை வெட்டியது வரை' சொல்லி முடித்தேன். கூடவே 16 ம் லூயினுடைய அழகிய மனைவி Marie Antoinette பற்றியும் குறிப்பிட்டேன்

'பிரான்சின் வேறு எந்தெந்த நகரங்களுக்கு எல்லாம் போயிருக்கிறீர்கள்?' என்பது அடுத்த கேள்வி.

'Lourdes, Bordeaux, Toulouse, Calais, Lyon.....' என பட்டியலை நீட்டினேன்.

எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லியே தீருவது என்பது என் உறுதியான தீர்மானமாக இருந்தது. மேலும் பல கேள்விகளைத் தொடர்ந்து, கடைசியாக அந்தக் கேள்வியைக் கேட்டார் அதிகாரி.

'இங்கு பரிசிலே சென் நதி ஓடுவதுபோல Bordeaux நகரிலும் ஒரு நதி ஓடுகிறது. அதன் பெயர் என்ன?'

இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்று அவர் கருதியிருக்கலாம். ஆனால் நான் ´La Garonne' என்று நதியின் பெயரைச் சொன்னதும் புன்னகைபூத்த முகத்தோடு நிமிர்ந்து பார்த்தார் அவர்.

அதற்குப் பிறகு அவர் எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை.

பெருமைப்படுவதற்காகவோ / புழுகுவதற்காகவோ இதனை நான் குறிப்பிடவில்லை. விடாமுயற்சியுடன் நாம் ஒரு காரியத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம் என்பதைக் கூறவே இதை எழுதுகிறேன்.

பிரான்சில் வாழும் இந்த 7 ஆண்டுகளில் இந்த நாடு குறித்து தினம் தினம் படித்துக்கொண்டே இருக்கிறேன். அடிப்படையில் பிரான்சை மிகவும் பிடிக்கும்..! அதுவே தேடலுக்கான அடிப்படைக் காரணம்..!

இறுதியில் இன்று காலை வந்த அந்தக் கடிதம் பின்வருமாறு கூறியது...

" நீங்களும் உங்கள் மகள் இலக்கியாவும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றுள்ளீர்கள்" 🇫🇷


4 comments:

  1. குடியுரிமை பெற்ற தகவல்
    மிக்க மகிழ்ச்சிதரும் செய்தி

    ஒரு நாட்டின் குடியுரிமை பெற
    அந்த நாடு குறித்த தகவல்கள்
    தெரிந்திருக்கவேண்டும் என அவர்கள்
    முறை வைத்திருப்பது மிகச் சரிதான்

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ரமணி சார்.. உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.

      நாடு குறித்த தகவல்களோடு, பிரெஞ்சு மொழியறிவு மற்றும் குற்றமேதும் செய்யாதிருத்தல், ஒழுங்காக வரி கட்டியிருத்தல் போன்றவற்றையும் கவனிக்கிறார்கள்.

      இவற்றையெல்லாம் கடந்து வந்தது மகிழ்ச்சி.

      Delete
  2. முயற்சி திருவினையாக்கும்
    மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா... முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். அதுதான் வெற்றிகளின் அடிப்படையாக உள்ளது.

      Delete